
16 Apr நான் மன்னித்தேன்… நீ ?
“நான் அவரை மன்னித்து விட்டேன். ஆனால் அவர் செய்த தவறை என்னால் மறக்க முடியாது என்கிற நிலையும். நாம் இன்னும் நமக்கு எதிரானவர்களை மன்னிக்கவில்லை என்பதே உண்மையான நிலையாகும். மன்னிப்பு என்பது ஒரு பத்திரத்தை இரண்டாகக் கிழித்து எரிப்பதைப் போன்றதாகும். அப்பொழுதுதான் மன்னிப்பு என்பது பூரணமாகும்” என்று ஹென்றிவார்டு பீச்சர் என்பவர் கூறுகிறார். இயேசு சிலுவையில் “பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார் (லூக்கா 23:34), நமது வேதனையின் மத்தியிலும் மற்றவர்களை மன்னிக்க இயலும் என்பதை சிலுவையில் நடைமுறைப்படுத்தியவர் நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்து. மத்தேயு 6:12இல் “எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறது போல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்” என்று வாசிக்கிறோம். “மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால். உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்” (மத். 6:15) என்று எழுதப்பட்டுள்ளது. மன்னிப்பு ஒரு விசுவாசியின் வாழ்வில் எவ்வளவு முக்கியம் என்பதை முழு வேதாகமத்திலும் குறிப்பாக நான்கு சுவிசேஷங்களிலும் அதிகமாக வலியுறுத்தப்பட்டுள்ளது. எதிரி களை அல்லது சக மனிதர்களை மன்னிப்பது நம்மால் இயலாத காரியம் என்று அநேக வேளைகளில் நாம் நம்புகிறோம். ஒருவேளை மன்னிப்பு என்பது இயேசு கிறிஸ்துவுக்கு மட்டுமே சாத்தியம். எனக்கு அது சாத்தி யமில்லை என்று சாக்குபோக்கு நமக்குநாமே அநேக வேளைகளில் சொல்லிக்கொள்ளுகிறோம். கிறிஸ்துவை உண்மையாகப் பின்பற்றும் எவருக்கும் இத்தகைய மன்னித்தல் சாத்தியம் என்பதை பவுலின் வாழ்வில் நாம் கண்டுகொள்ள முடியும்.
ஸ்தேவானும் பவுலும்
ஆதித்திருச்சபையின் தலைவர்களில் ஒருவனாகிய ஸ்தேவான் விசுவாசம் நிறைந்தவன். பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டவன் (அய். 6:5,8: 7:55). பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும் நடப்பித்தவன் (அப். 6:8). ஞானமுடையவனாய் காணப்பட்டவன் (அப். 6: 10). ஆனால் எதிராளிகள் ஸ்தேவானைக் கல்லெறிந்து கொல்லும் பட்சத்தில் “அவனோ முழுங்காற்படியிட்டு ஆண்டவரே. இவர்கள் மேல் இந்தப் பாவத்தைச் சுமத்தாதிரும் என்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னான்” (அப். 7:60). ஸ்தேவான் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டவன் என்பதற்கு அடையாளமே தனக்கு எதிராகக் குற்றம் சாட்டினவர்களையும், கல்லெறிந்தவர்களையும் மன்னித்ததின் வாயிலாக நாம் அறிந்துகொள்ளலாம். தற்கால ஆராதனைகளில் ஆவியினால் நிரப்பப்பட்டதின் அடையாளம் உரத்த சத்தமிட்டு கூக்குரலிடுவதும், நடனமாடுவதும், தங்கள் தாலந்துகள் திறமை இசை மட்டும் பாடல்களைப் பிரதானப்படுத்துவதும்தான் என்று தவறாக வாழ்ந்து சாதாரண விசுவாசிகளையும் அத்தகைய தவறான போதனைகளுக்கு வழிநடத்துவது என்பது மெய்யாகவே பரிசுத்த ஆவியானவரைத் துக்கப்படுத்துவது ஆகும். இயேசு கிறிஸ்து சிலுவையில் செய்ததை ஸ்தேவான் என்கிற பரிசுத்தவான் தனது வாழ்வில் மற்றவர்களை மன் னிப்பதின் மூலமாக வெளிப்படுத்தினார். பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டோர் மற்றவர்களை மன்னிக்கவும் தயங்கிடார் என்பது ஸ்தேவானின் வாழ்வில் நாம் கற்றுக்கொள்ளும் அற்புதமான, தேவையான பாடமாகும். ஸ்தேவான் கொல்லப்படுவதற்கு சவுலும் சம்மதித்திருந்தான் என்பதை அப்போஸ்தலர் 8:1 இன் மூலமாக நாம் அறிகிறோம். அத்தகைய பவுல் கிறிஸ்துவை சந்திப்பதற்கு முன்பு தனது மதத்திற் காக அல்லது நியாயப்பிரமாணத்திற்காக அல்லது யெகோவாவிற்காக வைராக்கியமுள்ளவராகக் காணப்பட்டிருந்தார் (அப். 22:3). ஆனால் ஸ்தேவானின் நீண்ட பிரசங்கமும் தனக்கு எதிரானவர்களை ஸ்தேவான் மன்னித்த விதமும் பவுலைத் தொட்டிருக்க வேண்டும். இயேசு கிறிஸ்துவை சந்தித்த பிறகு அவரது வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்களை அப்போஸ்தலர் நடபடிகள் மற்றும் அவரது நிருபங்கள் மூலமாக அறிகிறோம். எபேசியர் 4:32 மற்றும் கொலோசெயர் 3:13 ஆகிய நிருபங்களில் கிறிஸ்து மன்னித்தது போல நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள் என்று புத்தி சொல்லுகிறார். “மற்றவர்களை மன்னிப்பது என்பது அவர்கள் மன்னிப்புக்குத் தகுதியானவர்கள் என்பதினால் அல்ல. மாறாக நீங்கள் சமாதானத்தைப் பெறுவதற்கு மற்றவர்களை நீங்கள் மன்னிக்க வேண்டும் என்று ஜோனத்தான் லாவுட் (Jonathan Lockwood) என்கிற தேவ மனிதர் மற்றவர்களை மன்னிப்பதின் மூலமாகக் கிடைக்கும் சமாதானத்தைக் குறித்து வலியுறுத்துகிறார். சமாதானத்துடன் வாழவும், ஊழியம் செய்யவும் நாம் மற்றவர்களை மன்னிப்பது அவசியம்.
பவுலும் மாற்குவும்
இதே போல் இயேசுவின் அடியவராக பவுல் தனது முதல் அருட்பணிப் பயணத்தை பர்னபாவுடன் ஆரம்பிக்கிறார். இந்தப் பயணத்தில் பர்னபாவுக்கு இனத்தானாகிய மாற்கு என்கிற யோவானையும் அழைத்துச் செல்கின்றனர் (அப். 13:5,13). இடையில் மாற்கு இவர்களை விட்டுப் பிரிந்து எருசலேமுக்குத் திரும்பி விட்டார் (அப். 13:13), இது பவுலை அதிகமாகப் பாதித்திருக்க வேண்டும். எனவேதான் பவுலின் இரண்டாவது அருட்பணிப் பயணத்தை ஆரம்பிக்கும் வேளையில் மாற்குவை அழைத்துச் செல்ல மனமில்லை. இதனால் பவுலுக்கும் பர்னபாவுக்கும் மனத்தாங்கல் உருவானதை அப்போஸ்தலர் 15:36-40 வரையுள்ள வசனங்களில் இருந்து அறிய முடிகிறது. ஊழியக்காரன் தனது ஊழியத்தில் உண்மையுள்ளவனாக, ஒழுக்கமுடையவனாகக் காணப்பட வேண்டுமென்பதே பவுலின் எதிர் பார்ப்பாக இருந்திருக்க வேண்டும் (பிலி. 4:8). எனவே பவுல் தனது ஊழியப் பயணத்தில் பர்னபாவையும் மாற்குவையும் தவிர்த்துவிட்டு சீலாவை உடன் ஊழியனாக அழைத்துச் செல்லுகிறார். சில சமயங் களில் விசுவாசிகள் மற்றும் ஊழியர்கள் நடுவே இத்தகைய உறவு முறிவுகள் ஏற்பட்டு விடுகின்றன. இத்தகைய மனஸ்தாபங்களை எப்படி சரிப்படுத்துவது? எந்த பவுல் மாற்குவை அழைத்துக்கொண்டு போகக்கூடாது என்று சொன்னாரோ அதே பவுல் தனது வாழ்வின் இறுதி நாட்களில் தீமோத்தேயுவுக்கு எழுதின இரண்டாவது நிருபத்தில் (2 தீமோ. 4:11) “மாற்குவை உன்னோடே கூட்டிக்கொண்டுவா: ஊழியத்தில் எனக்குப் பிரயோஜனமுள்ளவன்” என்று எழுதுகிறார். மேலும் பிலேமோனுக்கு எழுதின நிருபத்தில் வசனம் 24இல் என் உடன்வேலையாட்களாகிய மாற்குவும் என்று குறிப்பிட்டதின் மூலமாக மாற்குவை மன்னித்ததோடு மட்டுமல்ல. அவரைத் தனது உடன் ஊழியராக ஏற்றுக்கொண்டார் என்பதை அறிகிறோம். பவுல் எழுதின எபேசியர், கொலோசெயர். பிலிப்பியர் மற்றும் பிலேமோனுக்கு எழுதின நிருபங்களை ரோம சிறைச்சாலையில் சுவிசேஷத்திற்காக அடைக்கப்பட்டிருக்கும் வேளையில் எழுதினார். அதாவது கி.பி. 61ஆம் ஆண்டில் எழுதியிருக்கக்கூடும் என்று வேத பண்டிதர்கள் கருதுகிறார்கள். வருடங்கள் செல்லச்செல்ல பவுலும்
ஆவிக்குரிய முதிர்ச்சி பெற்றவராக மாறியிருக்கிறார். கிறிஸ்துவின் சிந்தையைப் பெற்றுவிட்டபடியால் அவரைப் போலவே மாறிவிட்டார் (பிலி. 2:5). “நான் எனது எதிராளி அல்லது உறவு முறிந்த நண்பரிடம் மன்னிப்பு கேட்பது என்பது நான் தவறு செய்தவன் என்றும் எனது எதிராளி சரியானவர் என்று ஒத்துக்கொள்ளுவது அல்ல. மாறாக எனது சுயம் அல்லது இறுமாப்பை விட்டுக்கொடுத்து உறவுக்கு முக்கியத்துவம் அளிப்பதே மன்னிப்பு”. என்று அருள்திரு அறிவர் தியோடர் வில்லியம்ஸ் அவர்கள் செயல்படும் தேவன் என்ற புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.
சிலுவை சுமந்து கொண்டு கிறிஸ்துவைப் பின்பற்றும் ஒவ்வொரு சீஷனின் வாழ்விலும் இந்த மன்னிக்கும் மாண்பை கிறிஸ்து எதிர்பார்க்கிறார். அத்தகைய ஆவிக்குரிய நிலைக்கு நாம் உயர வேண்டும் என்பதே ஆண்டவரின் எதிர்பார்ப்பாகும். டைலர் பெரி (Tyler Perry) என்கிறவர் எழுதுகிறார் மன்னிப்பின் பாதையில் பயணித்து மற்றவர்களை மன்னிப்பது என்பது எளிதானதல்ல. ஆனால் அந்தப் பாதையில் சென்று மற்றவர்களை மன்னித்தால் நமக்கு விடுதலை உண்டு”. நமக்கு விடுவிக்கப்பட்ட வாழ்வு என்கிற ஒரு பக்கம் இருக்குமானால், மன்னிப்பு என்கிற மறுபக்கமும் கண்டிப்பாகக் காணப்பட வேண்டும்”
தரிசனச்சுடர் மார்ச் 2022
No Comments